Shell Programming Blog Shell Programming Blog

Tuesday 14 August 2012

திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்?

Unknown | 21:12 |

எல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இறைவன் படைத்து அவற்றுள் இரத்த பந்தங்கள், சொந்தங்கள் என்று பல பந்தங்களை ஏற்படுத்தி நம்மை இணைத்து இருப்பது மிகவும் அற்புதமான மற்றும் ஆறுதலான விஷயம்.

இப்படிப்பட்ட பந்தத்தில் கணவன் - மனைவி என்ற உறவு இருக்கிறதே சுபஹானல்லாஹ்!!! எவ்வளவு ஒரு அழகிய உறவானதாக இறைவன் நமக்களித்துள்ளான். இந்த அழகிய பந்தத்தை நிக்காஹ் என்ற கடுமையான திருமண ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்திக் கொள்கிறோம்.

இஸ்லாத்தில் திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது என்பதை பின்பவரும் ஹதீஸ் வலியுறுத்துகிறது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திப்பெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்." என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
இந்த திருமண நிகழ்வை நடத்துவது என்பது நம் இஸ்லாத்தின் அடிப்படையில் பார்க்கும் போது மிகவும் அழகிய, எளிய முறையில் நடத்தப்பட வேண்டிய
விஷயம். ஆனால் பல ஆண்டு காலங்களாக எப்படி நடக்கின்றது என்று நோக்கும் போது  பெயரளவில் தான் நாம் முஸ்லீம்களா என எண்ணத்தோன்றுகிறது. 

இஸ்லாம் வகுத்த திருமணமும் இக்கால திருமணமும் :

 பெண்ணை பெற்றவர்கள் என்றால் அப்பெண் பிறந்ததுமே, தங்களை தாய், தந்தை என்ற உயர்ந்த அந்தஸ்தை அடைய வைத்த பிள்ளை என்ற சந்தோசத்தை விட, இவளை எப்படி கட்டி கொடுக்க போகிறோமோ என்பது தான் அவர்களின் முதல் கவலை. இப்படி பெண்ணை பெற்றவர்கள் புலம்புவதற்க்கு காரணம் எப்படி இந்த பெண்களை நல்லபடியாக திருமணம் செய்து கொடுப்பது என்று நினைப்பதுதான். அதற்கு காரணம் இந்த சமுதாயத்தில் திருமணம் என்ற பெயரில் பல சடங்குகளை ஏற்படுத்தி,குறைந்த பட்சம் செலவுக்கு 3 லட்சம் மட்டும்  இல்லாமல் திருமணமே நடக்காது என்ற நிலையில்   நிக்காஹ் செய்வதையே சிக்கலான அமைப்பாக ஆக்கி வைத்துள்ளார்கள்!
எப்படி தேர்ந்தெடுக்கிறோம்?

ஒரு ஆணுக்கு, பெண் பார்க்கும் விஷயத்திலிருந்து திருமணம் முடிக்கும் வரை எவ்வளவு விஷயங்களை யோசிக்கிறோம்? அவள் நல்ல பெண்ணாக, சாலிஹானவளாக, மார்க்க கல்வியில் திறம்பட்டவளாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் விட, பெண் நல்ல நிறமுள்ளவளாக, அழகானவளாக, படித்தவளாக, வசதியுள்ளவளாக இருக்க வேண்டும் என்று பல தரங்களை எதிர் பார்ப்பார்கள்.
   பெண்கள் அவர்களின் செல்வத்திற்காகவும், அவர்களின் அழகுக்காகவும், அவர்களின் பாரம்பரியத்திற்காகவும், அவர்களின் நன்னடத்தைக்காகவும் மணந்து கொள்ளப் படுகின்றனர். நீ நன்னடத்தை உடையவளைத் தேர்வு செய்து வெற்றியடைந்து கொள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒருவேளை தாங்கள் எதிர் பார்த்த மாதிரி கிடைக்காத பட்சத்தில் சீர், வரதட்சணை என பேர பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். பணமும் அழகுமா ஒருவனுக்கு வாழ்நாள் முழுவதும் சந்தோஷத்தை தந்துவிட போகிறது? இவற்றையெல்லாம் கொடுத்தால்  மட்டும் அப்பெண் நல்ல நிறமுடையவளாக தெரிந்து விடுவாளோ கேட்பவர்களின் காமாலைக் கண்ணுக்கு...

 இதுவா நம் இஸ்லாம் சொன்ன வழி???. இந்த விஷயத்தில் மணமகனாக இருக்க கூடிய ஒவ்வொரு ஆணும் தான் நல்ல மனநிலையிலும், உறுதியான மனநிலையுடனும் சிந்தித்து செயல் பட வேண்டும்.
 பெண்களை அவர்களின் அழகுக்காக(மட்டும்) மணமுடிக்காதீர்கள். அவர்களின் அழகு அவர்களை அழித்து விடலாம்.அவர்களின் செல்வத்துக்காக மட்டும் மணமுடிக்காதீர்கள். ஏனெனில் அவர்களின் செல்வம் அவர்களை வழி தவற செய்து விடலாம் எனினும் அவர்களின் நல்லொழுக்கத்துக்காக அவர்களை மணம்புரியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : இப்னு அம்ரு (ரலி)
அதற்காக அழகிய, நிறமுள்ள, வசதியுள்ள பெண்களை மணக்கவே கூடாது என்றும் சொல்லவில்லை. அந்த விஷயத்திற்க்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் மீதி உள்ளவர்களின் நிலை??? அல்லாஹ்வின் படைப்பில் அனைவரும் அழகு தான், அழகு என்பது காணும் கண்ணையும் மனதையும் பொறுத்தது.

 அந்த நடிகை போல வேணும், அவளை போல் வேண்டும், இவளை போல் வேண்டும் என்று கனவு காணும் உலகமாக இப்போது இருந்து வரும்  எண்ணத்தைதான் மாற்ற வேண்டும்.

தனக்கு வாழ்க்கைதுணையாய் வரப்போகிறவனை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணிற்கு உண்டு  என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.  ஆணோ பெண்ணோ யாராக இருப்பினும் தனக்கு துணையாக வருபவர்கள் நல்ல எண்ணங்களுடன், வாழ்க்கை நடத்த போதுமான வசதியுடன் சாலிஹானவர்களாக இருந்தால் மட்டும் போதும் என்ற மனநிலையில் இருந்தாலே இது போன்ற பிரச்சனைக்கு இடம் இல்லாமல் போய்விடும்.

சம்மதம் கேட்டீர்களா?

அடுத்து பார்த்தோமேயானால் திருமணம் செய்து கொள்ள போகும் ஆண், பெண் இவர்களின்  சம்மதம் கேட்பது.பொதுவாக ஒவ்வொரு ஆண் மகனும் பெண்ணின் புகைப்படத்தை பார்த்து சம்மதம் சொன்னால் தான் திருமண நிச்சயமே நடக்கும். ஆனால் பெண்கள் விஷயத்தில் அவர்களின் சம்மதத்திற்க்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சமீபகாலமாக பெண்கள்  கல்வியறிவில் ஓரளவு முன்னேறி வருவதால் இந்நிலை சிறிது மாறியுள்ளது எனலாமே தவிர முழுமையாக மாற்றம் கண்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதிலும் சில வீட்டில் அதற்கான சந்தர்ப்பத்தையே தருவதில்லை. “அவள் என்ன சொல்ல போகிறாள், சின்ன பொண்ணு, நாமதான் அவளுக்கு நல்லது எது கெட்டது எது என பார்த்து செய்யணும்” என கூறிவிட்டு திருமண ஏற்பாடுகளில் இறங்கி விடுவார்கள். அவள் மனதில் என்ன உள்ளது என்பதை அவசியம் அறிய கூடிய காலக்கட்டத்தில் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏனெனில் அவசர அவசரமாக எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டு அதன் பின்னர் திருமணத்தன்றோ, இல்லை திருமணம் முடிந்த சில நாட்களிலோ பிரச்சனைகள் உருவாகி பிரிவதற்கான வாய்ப்புகள் உண்டு. அது போல் இன்று பல இடங்களில் நடப்பதையும் கேட்டும் பார்த்தும் கொண்டிருக்கின்றோம்.
முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் ஒரு பெண்ணை மணம் பேசினார். அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளைப் பார்த்துக் கொள்! ஏனெனில் அவ்வாறு பார்ப்பது உங்கள் இருவருக்குமிடையே அன்பை ஏற்படுத்த ஏற்றதாகும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்:முகீரா (ரலி). நூல்கள்: இப்னுமாஜா 1855
இதை எத்தனை பேர் செயல்படுத்துகிறோம்? திருமணத்தன்று தான் பார்க்க வேண்டும் என நமக்கு நாமே புதிய சட்டத்தை உருவாக்குவதால் தான் பல அசம்பாவிதங்கள் நிகழ்கிறது.

நன்கு தெரிந்த ஒரு தம்பதியர். தன் மகளின் விருப்பத்தை கேட்காது திருமண ஏற்படு செய்ய, திருமணத்தன்றோ ஜமாத்தார்கள் திருமண ஒப்பந்தத்தில் கைய்யொப்பம் வாங்க வரும் போது முறையிட்டிருக்கின்றாள். இதை விட ஒரு மோசமான அவமானம் ஒரு பெற்றோருக்கு கிடைக்க முடியுமா??? சொல்லுங்கள்!!!. இந்த சங்கடங்கள் ஏற்படாமல் இருக்கதான்  நம் இஸ்லாம் இருவரின் மண ஒப்புதல் இன்றி திருமணம் முடிக்க கூடாது என்ற எளிய வழியை வலியுறுத்துகின்றது. எளிய விஷயத்தை கடைபிடிக்க மறுத்தால் பெரிதான விளைவுகளை சந்திக்க நாம் தயாராகத்தான் இருக்க வேண்டும். இது தேவையா?
கன்னி பெண்ணாயினும்,விதவையாயினும்  சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறியபோது கன்னி பெண்(சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன்.அதற்க்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவளது மொளனமே அவளது சம்மதம் என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி), ஆதார நூல் : புகாரி   
என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து இதை கூறியபோது அத்திருமணத்தை ரத்து செய்தார். அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம்(ரலி), ஆதார நூல் : புகாரி
மேற்கண்ட ஹதீஸ்களை பார்க்கும் போது மணமக்கள் இருவரின் சம்மதமும் எவ்வளவு முக்கியம் என்றும், அப்படி விரும்பாத திருமண வாழ்க்கை செல்லாது என்றும் விளங்குகின்றது.

மஹர்ரா வரதட்சணையா? எது நபி வழி?

அடுத்து ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்கள் விரும்பியவாறு வழங்ககூடிய மணக்கொடை எனும் மஹரை பற்றியும் நம் இஸ்லாம் மிகவும் அழுத்தமாகவே வலியுறுத்துகின்றது. மஹர் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும், அவளை திருமணம் முடிக்க போகும் ஆண் கட்டாயம் கொடுக்கவேண்டிய கொடையாகும். அது பணமாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை, பொருளாகவோ, இடமாகவோ அல்லது அவளின் இஷ்டப்படி எதுவாக வேண்டுமானாலும்  இருக்கலாம். மஹர் கொடுப்பதன் அர்த்தமே, அவளுக்கு பிற்காலத்தில் ஏதேனும் கஷ்டம ஏற்பட்டால் அதைக் கொண்டு அவள் வாழ்வியலை நடத்தி செல்ல உதவவே ஆகும். அதை யாரும் திரும்பி பெற இயலாது. முழுக்க முழுக்க அது அவளுக்கே சொந்தமானதாக இருக்கும்.
பெண்களுக்கு அவர்கள் மணக்கொடைகளை (மஹரை)கட்டாயமாக கொடுத்து விடுங்கள். அவர்களாக மனமுவந்து அதில் ஏதேயெனும் விட்டு தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் உண்ணுங்கள். (அல்குர்ஆன் : 4:4 )
ஒரு குவியலையே மஹராக நீங்கள் அவர்களுக்கு கொடுத்தாலும் அதை திரும்ப பெற இயலாது. ( அல்குர்ஆன் : 4:20 )
மஹர் தொகையை தீர்மானிக்கும் உரிமை பெண்களிடம் விடுப்பட்டுள்ளதால் அவர்கள் விரும்பினால் அதை விட்டுத்தரலாம். அல்லது தவணை முறையில் பெற்றுக் கொள்ளலாம்.(அல்குர்ஆன்2:237      
எவ்வளவு அழகான விஷயத்தை நம் பெண்களுக்கு இஸ்லாம் ஏற்படுத்தி தந்துள்ளது. இதை எத்தனை பேர் புரிந்து நடந்துக் கொள்கின்றார்கள்?அதிலும் மஹர் என்பது அவள் விருப்பமானதாக இருக்க வேண்டும் என்றும், அதை அவளிடமே கேட்க வேண்டும் என்றும் நம் இஸ்லாம் கூறுகின்றது. ஆனால் ஒரு காலத்தில் மஹர் தொகை என்பது ருபாய்.501 அல்லது 1001 என்று அவர்களே ஒரு தொகையை நிர்ணயித்து திருமணம் முடிப்பார்கள். இன்னும் சிலரோ “பெண்ணின் மஹர் விருப்பத்தை கேட்பாராம், பொண்ணு சொல்றதை மஹரா கொடுப்பாராம்!! அவ ஊரையே எழுதி கேட்பா, கொடுத்திடுவாரா?” என்றெல்லாம்  கூறி  ஆர்வத்தை குறைத்துவிடுவதும், தடைச் செய்வதும் பார்க்கவே செய்கிறோம். ஆனால் இன்று பெற்றோர் மற்றும் பெண்களின் மார்க்க கல்வியறிவால் மஹர் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு மாற்றம் அடைந்து வருகிறது என்பதில் சிறு மகிழ்ச்சி. உண்மையை சொல்ல வேண்டுமெனில் இப்போதெல்லாம் மஹர் என்பது பத்து பவுனுக்கும் மேற்பட்டதாகவே கொடுக்க முன்வந்துள்ளார்கள். ஒரு சில இளைஞர்கள் மட்டுமே தன் பெற்றோர்  மூலம் அப்பெண்ணின் விருப்பத்தை அறிந்து மஹராக கொடுக்கின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்

இது போன்று நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த வழி முறையில் பெண்ணிற்கு தகுந்த மஹரை  கொடுத்து, வரதட்சணை ஏதும் வாங்காமல் விருந்து உபசரிப்புகள் மட்டுமே கொண்டு எளிய முறையில் திருமணம் முடிப்பவர்களை மனதார வாழ்த்தி வரவேற்க வேண்டும். இதே போன்று நாமும்செய்து, நம் சந்ததியர்களும் செய்ய நிய்யத்து வைக்க வேண்டும் என்று எத்தனை பேர் நினைக்கிறார்கள்? அதை இழிவான செயலாக பார்ப்பவர்கள் தான் இன்று நிறைய பேர் உள்ளனர். நம் மார்க்கம் திருமணம் முறையில் குறிப்பாக பெண்களுக்கு எவ்வளவு சலுகையுள்ள சட்டம் வகுத்து தந்துள்ளது. அதை நம் சமுதாயம் ஏன் ஏற்க மறுக்கிறது என்பது தான் புரியாத புதிராக உள்ளது.

இவர்களிடத்திலும் மாற்றம் வேண்டும்! :

பவுன் அதிகம் கொடுத்து, சீர் வரிசை அதிகம் செய்து, இரண்டு அல்லது நாலு சக்கர வாகனம், வீடு, இதை விட நகைச்சுவை கூடுதலாக பணியார பணம், நாத்தனார் குடம், நாத்தானர் (மாப்பிள்ளை உடன் பிறந்த பெண்கள்) நகை மற்றும் ஆடம்பர மாலை சூடும் விழா, பேண்டு வாத்தியங்களோடு அரங்கேரும் திருமணம் தான் அழகிய திருமணங்களாக இன்றைய நம் சமுதாய மக்கள் கருதுகிறார்கள். அவ்வளவும் ஏன் நம் ஊர் நாட்டாமைகள், ஜமாத்தார்களே இப்படிப்பட்ட கல்யாணத்திற்க்கு மட்டுமே ஊர் ஓலை தருவோம். நாங்கள் திருமணத்தை நடத்தி கொடுப்போம் இல்லை என்றால் செல்லாது என்றெல்லாம் கூறி விடுகிறார்கள்.

ஊர் மக்களை தலைமை தாங்கி நடத்த வேண்டிய ஊர் ஜமாத்தும், சரியான வரைமுறையை பின்பற்றாமல் பின்பற்றுபவர்களை அலைக்கழிப்பது எவ்வகையில் நியாயம்???. இது போன்ற அலைக்கழிப்பு என் திருமணத்திலேயே நடந்தது. ஊர் ஓலை தரமாட்டோம் என்றும், அப்படி ஜமாத்தை மீறி இந்த திருமணத்திற்க்கு செல்பவர்களுக்கு அபராதம் என்றும், ஊர் ஒதுக்கி வைக்கப்படும் என்றும் வீடு வீடாக சென்று அறிவித்து விட்டார்கள். காரணம் என்ன தெரியுமா சீர் வாங்காமல், கருகமணி கட்டாமல், மாலை போடாமல் வெறும் விருந்து உபசரிப்பும் மட்டும் வைத்து நபி வழியில் திருமணம் செய்வதுதானாம். என்ன ஒரு இழிவான செயல் பாருங்கள். அல்லாஹ் தாலாவிடம் இன்று நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களுக்கும் நாளை மறுமையில்  பதில் சொல்லியாக வேண்டும் என்பதை நினைவில் கொண்டு எப்போது  நாம் மனதளவில் மாற போகின்றோம்?

எங்கள் வீட்டில் உள்ள அனைத்து ஆண்களும் அல்லாஹ்வின் பேருதவியால் தான் நினைத்த படி இஸ்லாத்தின் வழியில் திருமணம் முடித்தார்கள். ஆனால் இரண்டே பெண்களை கொண்ட எங்கள் குடும்ப பெண் பிள்ளைகளுக்கு  இஸ்லாத்தின் வழியில் திருமணம் முடிக்க முடியவில்லை, காரணம் இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை சரியாக அறியாத ஆணும், ஆண் வீட்டார்களும், தடைகல்லாய் ஜமாத்தார்களும்!

இது போன்ற தேவையற்ற எதிர்பார்ப்புகளை திருமணம் என்ற அழகிய பந்தத்தில் நிரப்பிய நம் சமுதாயத்தால், திருமணத்திற்கு ஏங்கி தவிக்கும் எத்தனை எத்தனை முதிர் கண்ணிகளை நம் கண் முன்னே முடிகிறது.  இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் பெண்கள் தவறான வழியில் போக நம் சமுதாயமும், நாமும் வழி வகுகிக்கின்றோம் என்பது சிந்திக்க வேண்டிய விஷயமும கூட.

இது போன்ற அனாச்சாரங்கள் மற்றும் போலி ஆடம்பரம் நிறைந்த திருமணங்களை ஒரு சிலர் நினைத்தால் மட்டும் மாற்றவோ, நிறுத்தவோ முடியாது. இஸ்லாத்தின் பால் பிறந்த ஒவ்வொரு ஆணும், பெண்ணும்  நினைத்தால் மட்டும் ஒரு நிரந்த மாற்றத்தை கொண்டு வர முடியும் இன்ஷா அல்லாஹ்...  ஒரு கைதட்டினால் ஓசை  வராது என்ற பல மொழிக்கேற்ப ஒரு கையாக ஆண் சமுதாயமும், மறு  கையாக பெண் சமுதாயமும் செயல்பட்டால் மட்டுமே முழுமையான மாற்றத்தை இஸ்லாத்தின் திருமணங்களில் கொண்டு வர முடியும்..

எனவே இதுவரை நம் சட்டங்களை மதிக்காமல் இருந்த நாட்கள் இத்தோடு ஒழியட்டும். இனி வரும் காலங்களில் இஸ்லாத்தில் பிறந்த ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாம் வகுத்த சட்டப்படி நம் பிள்ளைகளுக்கு திருமணம் முடிக்க வேண்டும் என்று நிய்யத்து (மன உறுதி) கொள்வோமாக.... நம் நிய்யத்து நல்லவிதமாக இருப்பின் அதை அல்லாஹ் நிச்சயம் நாடுவான் என நம்பிக்கை கொள்வோம்...

0 Comments:

   

Post a Comment

Don't just read and walk away, Your Feedback Is Always Appreciated. I will try to reply to your queries as soon as time allows.

Note:
1. If your question is unrelated to this article, please use our Facebook Page.
2. Please always make use of your name in the comment box instead of anonymous so that i can respond to you through your name and don't make use of Names such as "Admin" or "ADMIN" if you want your Comment to be published.
3. Please do not spam, spam comments will be deleted immediately upon my review.

Regards,
Mohamed Abubakar Sittik A

 

Shell Programming Copyright © 2012 Shell Programming theme is Designed by Abusittik, Shell Programming